Saturday, February 14, 2009

சுகதுக்கம்

ரோஜாவில்
முள்ளை உணருவதைவிட,
முள்ளின் மத்தியில்
ரோஜாவை காணக் கற்றுக்கொள்

காலணியில்லாமை குறித்து
கவலைப்படுவதைவிட,
காலேயில்லாதவனைக் கண்டு
திருப்தியுறக் கற்றுக் கொள்

ஏனெனில்,
சுகமொரு பக்கம்
துக்கமொரு பக்கம் என‌
இணைந்ததே
வாழ்க்கை நாணயம்.
நினைவுகள்

பொய்ம்மையே
வாழ்வியலாய்க் கொண்ட‌
மானுடத் தோப்பின்
மத்தியில்,

என்னுள் நான்
தொலைந்து போகிற‌
லெளகீகத் தருணங்களில்
நினைவுக்கு வருகிறது‍

என் பேனாவும்,
நிரப்பப்படாத‌
வெற்றுத் தாள்களும் !
புதியன ஏற்று... ... ...

இளமையை இழந்தால்
அனுபவம் பெறலாம்.

பிரம்மச்சரியம் இழந்தால்
இல்லறம் பெறலாம்.

காமத்தை இழந்தால்
கண்ணியம் பெறலாம்.

எப்போதும்,
எதையேனும் இழந்து,
எதையேனும் பெறு !

பழையன் கழித்து,
புதியன் ஏற்று
ஓடிக்கொண்டேயிருக்கும்
நதியைப் போல !
தேடல் வேட்கை

தேவைகளின் தேடலில்
ஒவ்வொரு நாளும்
புதிதாய் முளைக்கும்
மற்றொரு தேவை !

தேடலிம்போது
தேவைகள் மாறுபடும்.
எனினும், நீண்டு வளரும்
முடிவிலாச் சங்கிலியாய் !

விற்பதும், வாங்குவதுமாய்
தொடரும் வணிகத்தில்
காலம், அனுபவம்
இரண்டுமே பயன்படு பொருள்கள்

இருப்பதை இழந்து,
இல்லாததைப் பெற்று என‌
எப்போதும், எதையேனும்
தேடிக் கொண்டே
நாம் !
முகமறியாப் பொழுது...

நிழல்களை நேசிக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
நிஜத்தை யாசிக்கும்
தொலைபேசித் தேவதையாய்
பரிச்சயமானாய் நீ

அந்தக்கணத்தில்
என் வாழ்வின்
அர்த்தத்தை தரிசித்த‌
நெகிழ்வு என்னுள்!

பிரபஞ்சத்தின்
சகல் எல்லைகளும்
நம் வார்த்தை விநியோகங்களில்
பரிமாறாப்பட்டன.

பலவேளைகளில்
வார்த்தைகள் தீர்ந்து போனபின்
மெல்லிய மெளனங்களும்
துணைகளாயின.

ஒரு
அந்திப் பொழுதில்
நீ விரும்பியபடி
நம் சந்திப்பும் நிகழ்ந்தது.

உன் விழிகளில்
அதிர்வின் பூகம்பம்.
அன்றோடு அறுப்பட்டது
நம் நட்பு.

எனதான‌
உடல் ஊனத்தை
உற்று நோக்கிய‌
உன் விழிகளுக்கு
புலப்படாமல் போனதெப்படி
ஊனப்படாத
என் உணர்வு.
பொய்முகம் களைய...

ஓரடிவைக்க‌
ஒருயுகமாய்த் தோன்றும்.
இடையூறுகளை ஏற்க‌
இதயம் தருமாறும்.

கனவுகளை தள்ளீப்போட‌
ஆசையாய் மனம்
பரபரக்கும்.

நிஜங்களை
நினைக்காமலிருக்க‌
திரையரங்குகளை மனம் நாடும்.

தினம் தினம்
பொய்முகம் போர்த்தி,
இலட்சியத்தை இடைநிறுத்தி என‌
எண்ணற்ற குறைகள்
என்னுள்ளிருந்தாலும்,
என்னையும் கூட‌
ஒரு நல்ல முன்னோடியென‌
வைத்தியங்கும் ஓருலகம்.

என்பொருட்டு இயலாதெனினும்,
அவர்களுக்காகவேணும்
களைய வேண்டும்
என் குறைகளை !
செய்தித்தாள்

அரசியல் வியாபாரிகளின்
தகிடுதத்தங்கள்,
உணர்வுகளைப் புறந்தள்ளிய‌
உறாவுகளின் மீறல்கள்,

அன்றாடங்காய்ச்சியின்
அடிவயிற்று அவலம்,
அடுத்த தலைமுறையின்
அழிவுப்போக்கு,

எங்கேனும்
ஓர் விபத்து என‌
தினம் தினம்
அபச்செய்திகளையே சொன்னாலும்
அன்றாடம் வாசிக்க‌
ஆவல் கொள்கிறது
நம்பிக்கை மனசு.