Saturday, January 24, 2009

ஒற்றைத் தட்டுதலுக்குப்பின் காத்திருப்பவன் .!

தட்டுதலுக்குப்பின்
காத்திருக்க நேரிடும்
நொடிகளின் நீளுமையில்
ஒளிந்து நின்று கண்சிமிட்டும்
கம்பீர மௌனங்கள் சுகமானவை.

கடந்துபோகும் பலரும்
கவனித்து கண்ணுறுகையில்
திறத்தலுக்கான
காத்திருப்பை பறைசாற்றி
என் கர்வம்
முகத்தில் கொப்பளிக்கும்.


திறத்தலை
எதிர்பார்த்து உள்ளிருப்பின்
சலன அசைவுகளை
மனசின் அடிமனப்படிமங்கள்
ஆழ்ந்து கணக்கிடும்.


இன்னொருமுறை
வருகையை அறிவிக்க
அதிர்வை எழுப்பும்
கவன ஈர்ப்புறுவை
மனம் நாடினாலும்,
அமைதியாயிருவென
அறிவு ஆணையிடும்.


இத்தனை சலனங்களோடும்
இந்தக் கணமோ,
அடுத்த நிமிசமோ,
யாரேனும்
என் வருகையுணர்ந்து
ஓடிவந்து தாழ் திறக்கக்கூடுமென
இன்னமும் காத்திருக்கிறேன்-
ஒற்றைத் தட்டுதலுக்குப்பின்.!

குறும்பாக்கள்.....

செம்மொழிக்கிணையான‌

செவ்வியல் மொழி
மழலை மொழி.

விளையாட்டுபகரணங்கள்
நடுவில் தேவதூதன்
குழந்தை.