இவ்வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி. மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைகளை மேலும் அறிந்து கொள்ள இவ்வலைப்பூவின் இணைப்பில் உள்ள மற்ற வலைப்பூக்களை பார்க்கவும். . . . .
Saturday, February 14, 2009
என் குரலின்
மடிப்புகளில் உள்ள்
மௌனங்களினூடே
ஒளிந்திருக்கின்றன
உன்மீதான மதிப்பீடுகள்
என்
மௌனங்களை
வலிந்து பற்றி
வருடிக் கொடுத்து,
நாய்க்குட்டியென பழக்கி
மதிப்பீடுகளின் அகமுகம்
அறியமுயல்கிறாய்
ஆதலினால்,
இப்போதெல்லாம்
உன்னைக் கண்டதும்
அச்ச அவஸ்தையில்
வார்த்தைக் குவியல்களை
வாரியிறைத்துவிட்டு
ஓடியொளிகின்றன
என் மௌனங்கள் !
வரப்புகள் பிரிப்பதில்
தொடங்கின பூசல்
வாழ்க்கையின்
கடைசி நாள் வரைக்கும்
தீர்ந்த பாடில்லை.
பக்கத்து வீடுதான்
எனினும்,
பலகாதத் தொலைவு
மனங்களுக்குள்.
நெற்றியில் முடிச்சுவிழ,
கண்களைச் சுருக்கி
பார்த்த
ஏளனங்கலந்த
அருவெறுப்புப் பார்வைகளின்
பிடியிலிருந்து இன்னமும்
மீள மறுக்குது மனசு.
எனினும்,
என் சுயகௌரவத்தின்
செவிகளில் வேகத்தோடு
பளீரென்றறைகிறது
பக்கத்து வீட்டு
மரண ஓலம் !
ஊர்முழுவதும்
அயர்ந்துறங்கும்
நடுநிசிப்பொழுதில்
யாருமற்ற தனிமை தேடி
நீளுகின்றன
என் கால்கள்
கடந்துபோகும்
பலகாதங்களுக்குப்பின்னும்
பயணிக்க வேண்டிய
நீள் தூரங்கள்
விழிகளில் விரிகின்றன
உடன்வந்த
காசுபணம், பெயர்புகழ்
குலகௌரவம், குடிப்பிறபு
என்கிற முகமூடிகளெல்லாம்
ஒன்றன் பின் ஒன்றாய்
கழன்றுகொள்ள
இன்னும் இன்னும் என
தேடிப்பயணிக்கின்றன
என் பாதங்கள் !
நம்
சந்திப்புகளின் போது,
வலிந்து பற்றி
சப்த வில்லெடுத்து
வார்த்தைக் கணைகளால்
என் மலரினும் மெல்லிய
மெளனத்தை சிதறடிக்கிறாய்
என் மெளானம்
பாதரசக்குமிழ்கள் போல
திசையெட்டும் சிதறி
உருண்டோடுவதையும்,
அவற்றை மேட்டெடுக்க
யத்தனிக்குமென் முயற்சிகளையும்
இமையொட்டாமல்
வேடிக்கை பார்க்கிறாய்
'நீ
சிதறடிக்கவும்,
வேடிக்கை பார்க்கவும்
நானும் என் மௌனமும்
காட்சிப் பொருள்களா?'
என்று வினவத்தூண்டும்
கடுங்கோபம்
நெஞ்சுக்குள் அலைமோதும்
எனினும்,
உன் புன்னைகைகளை
தொலைத்துவிட விருப்பமில்லாததால்
எப்போதும் போலவே
மௌனித்திருக்கிறேன்
நான்
தேவைகளின் தேடலில்
ஒவ்வொரு நாளும்
புதிதாய் முளைக்கும்
மற்றொரு தேவை !
தேடலிம்போது
தேவைகள் மாறுபடும்.
எனினும், நீண்டு வளரும்
முடிவிலாச் சங்கிலியாய் !
விற்பதும், வாங்குவதுமாய்
தொடரும் வணிகத்தில்
காலம், அனுபவம்
இரண்டுமே பயன்படு பொருள்கள்
இருப்பதை இழந்து,
இல்லாததைப் பெற்று என
எப்போதும், எதையேனும்
தேடிக் கொண்டே
நாம் !
நிழல்களை நேசிக்கும்
மனிதர்களுக்கு மத்தியில்
நிஜத்தை யாசிக்கும்
தொலைபேசித் தேவதையாய்
பரிச்சயமானாய் நீ
அந்தக்கணத்தில்
என் வாழ்வின்
அர்த்தத்தை தரிசித்த
நெகிழ்வு என்னுள்!
பிரபஞ்சத்தின்
சகல் எல்லைகளும்
நம் வார்த்தை விநியோகங்களில்
பரிமாறாப்பட்டன.
பலவேளைகளில்
வார்த்தைகள் தீர்ந்து போனபின்
மெல்லிய மெளனங்களும்
துணைகளாயின.
ஒரு
அந்திப் பொழுதில்
நீ விரும்பியபடி
நம் சந்திப்பும் நிகழ்ந்தது.
உன் விழிகளில்
அதிர்வின் பூகம்பம்.
அன்றோடு அறுப்பட்டது
நம் நட்பு.
எனதான
உடல் ஊனத்தை
உற்று நோக்கிய
உன் விழிகளுக்கு
புலப்படாமல் போனதெப்படி
ஊனப்படாத
என் உணர்வு.
ஓரடிவைக்க
ஒருயுகமாய்த் தோன்றும்.
இடையூறுகளை ஏற்க
இதயம் தருமாறும்.
கனவுகளை தள்ளீப்போட
ஆசையாய் மனம்
பரபரக்கும்.
நிஜங்களை
நினைக்காமலிருக்க
திரையரங்குகளை மனம் நாடும்.
தினம் தினம்
பொய்முகம் போர்த்தி,
இலட்சியத்தை இடைநிறுத்தி என
எண்ணற்ற குறைகள்
என்னுள்ளிருந்தாலும்,
என்னையும் கூட
ஒரு நல்ல முன்னோடியென
வைத்தியங்கும் ஓருலகம்.
என்பொருட்டு இயலாதெனினும்,
அவர்களுக்காகவேணும்
களைய வேண்டும்
என் குறைகளை !
Saturday, January 24, 2009
ஒற்றைத் தட்டுதலுக்குப்பின் காத்திருப்பவன் .!
தட்டுதலுக்குப்பின்
காத்திருக்க நேரிடும்
நொடிகளின் நீளுமையில்
ஒளிந்து நின்று கண்சிமிட்டும்
கம்பீர மௌனங்கள் சுகமானவை.
கடந்துபோகும் பலரும்
கவனித்து கண்ணுறுகையில்
திறத்தலுக்கான
காத்திருப்பை பறைசாற்றி
என் கர்வம்
முகத்தில் கொப்பளிக்கும்.
திறத்தலை
எதிர்பார்த்து உள்ளிருப்பின்
சலன அசைவுகளை
மனசின் அடிமனப்படிமங்கள்
ஆழ்ந்து கணக்கிடும்.
இன்னொருமுறை
வருகையை அறிவிக்க
அதிர்வை எழுப்பும்
கவன ஈர்ப்புறுவை
மனம் நாடினாலும்,
அமைதியாயிருவென
அறிவு ஆணையிடும்.
இத்தனை சலனங்களோடும்
இந்தக் கணமோ,
அடுத்த நிமிசமோ,
யாரேனும்
என் வருகையுணர்ந்து
ஓடிவந்து தாழ் திறக்கக்கூடுமென
இன்னமும் காத்திருக்கிறேன்-
ஒற்றைத் தட்டுதலுக்குப்பின்.!