Saturday, October 9, 2010

செந்தமிழும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்புகளும்

"சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும்
என் சாம்பல் தமிழ்மணந்து போகவேண்டும்"

என்கிற பாவேந்தரின் வாக்கினைப் பின்பற்றி, தமிழின் தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, பண்பாட்டுக்கலையறிவு வெளிப்பாடு, பிற மொழித்தாக்கமில்லாத்தன்மை, குறைவற்ற இலக்கிய வளம், உயர் சிந்தனைகள், கலையிலக்கிய தனித்தன்மை, மொழிக்கோட்பாடுகள் போன்ற செம்மொழித்தகுதிகளைச் சிறப்பிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள் பலரும் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிவருவதை வரலாறுகள் சொல்கின்றன.

சங்க காலத்திலிருந்தே பல மாற்றுத் திறன் புலவர்கள் தங்கள் கவித்திறனால் தமிழை சிறப்பு செய்துள்ளனர். இரண்டு கண்களும் தெரியாதவரின் தோளில் இரண்டு கால்களும் இல்லாத மற்றொருவர் ஏறிக்கொண்டு நாடெங்கும் பாடித்திரிந்த அற்புதமான இரட்டைப்புலவர்களை கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல பார்வையில்லாததால் , தன் முதுகில் மற்றவர்களை எழுதச்சொல்லி, அந்தத் தொடுவுணர்ச்சி மூலமாக, ஏடுகள் ஆயிரம் தேடிப்படித்து, பல ஒப்பற்ற காப்பியங்களை எழுதிய அந்தகக்கவி வீரராகவ முதலியார் பற்றி அறிந்துள்ளோம்.

இவர்கள் போல, ஐம்புலன்களில் ஏதேனும் ஒன்றையிழந்து உடலால் குறைபட்டாலும்கூட, உள்ளத்தின் உயர்வால், சிந்தனையாற்றலால் சமூகத்தைப் புரட்டிப்போடும் எழுத்து வன்மையால், சமூக மாற்றங்களை விளைவித்துக்கொண்டு இருக்கும் பல மாற்றுத்திறன் படைப்பாளிகளை இன்றும் கூட தன்னகத்தே கொண்டு சிறப்பதுவும் நம் அன்னைத் தமிழின் அற்புத அடையானமேயன்றி வேறில்லை.

கோவை பாரதியார் ப‌ல்கலைக்கழகத்தில் "தற்கால தமிழிலக்கிய வளர்ச்சியில் ஊனமுற்றோர் பங்களிப்பு" என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு உள்ள பார்வையற்ற விரிவுரையாளரும் தமிழார்வலருமான திரு.கந்தசாமியின் தீவிர முயற்சிகள் அளப்பரியவை.

இதற்கும் முன்பாக முனைவர் அன்னி தாமசு மேற்கொண்ட ஆய்வு "தமிழிலக்கியத்தில் ஊனமுற்றோர்" என்கிற தலைப்பில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வெளிவந்துள்ளது. இவற்றின் வாயிலாக ஆய்வுகளை மேற்கொண்டு சான்றுகள் சமர்ப்பிக்கிற அளவிற்கு தமிழிலக்கிய உலகில் மாற்றுத் திறன் படைப்பாளிகளின் பங்களிப்புகள் தமிழக மொழியியலினூடாக விரவிக்கிடப்பதை உணர்ந்துகொள்ள இயலும். அத்தகைய படைப்பாளிகளில் சிலரைப்பற்றிய குறிப்புகளையும், அவர்களின் படைப்பிலக்கிய பங்களிப்புகளையும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

இருபத்தைந்து நூல்களுக்குமேல் வெளியிட்டுள்ளதோடு, நிகழ், பரிமாணம், தமிழ்நேயம் போன்ற இதழ்களை வெளியிட்டுள்ள இதழாளராகவும் தமிழ்ச்சேவையாற்றி வருபவர் கோவை ஞானி. தன் இருபதாண்டுக்கால பார்வையின்மைக்குறையையும் முதுமையையும் தாண்டி செயலாற்றுகிறார்.

'கனவுப்பறவை', 'மறுபடியும் விடியும்', 'முகமற்ற மனிதர்கள்' போன்ற பல்வேறு தலைப்புகளிலான முப்பது நூல்களை படைத்துள்ள மதுரை எழுத்தாளர் கர்ணன் தன் இளவயதின் இளம்பிள்ளைவாதத்தை மீறி இலக்கியப்பயணிப்பை மேற்கொள்கிறார்.

தர்மபுரி மாவட்ட முதல் பார்வையற்ற முனைவரான கோ.கண்ணன் 'தமிழ் நாவல்களின் தலைமுறை இடைவெளி' எனும் தனது ஆய்வை, நூலாக்கி எழுத்தாளரானவர். தமிழ்த்துறை இணைப்போராசிரியராக திகழ்வதோடு 'ஓசைகளின் நிறமாலை', 'மழைக்குடை நாட்கள்' போன்ற கவிதை நூல்களை வெளியிட்டுள்ள கவிஞராகவும் தன்னை அடையாளித்துள்ளார்.

'குழந்தை வளர்ப்பிற்குச் சில உதவித்துளிகள்' எனும் கட்டுரை நூல் எழுதி, தன் சிந்தனையாற்றலை வெளிப்படத்தியுள்ள சேலம் எழிலரசன் தன் வலப்பக்க உடலியல் செயல்பாட்டை முழுமையாக இழந்தவர்.

'காகித உதடுகள்', பதினாறு வயதுக்காரி' போன்ற கவிதைத் தொகப்புகளை வெளியிட்டுள்ள கரூர் கவி.பெரியசாமி, 'கைக்குட்டைக்குள் தொலைந்த வானம்' எனும் பால்யகால உணளர்வுகளை எடுத்தியம்பும் கவிதைத்தொகுப்பின் ஆசிரியரான மதுரை இளைஞ‌ர் துளிர், 'உள்ளங்கையில் சிகரம்', 'யார்ஞானி?', 'இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடுவில்' போன்ற நூல்களின் ஆசிரியராகவும், ஆன்மீக அறிவொளியாகவும் திகழும் விழுப்புரம் திரு இராமானந்த குரு. 'மழையில் நனைந்த குடை' கவிதைத்தொகுப்பின் ஆசிரியரான இரா.பூபதி, புதுவை மாநில மாற்றுத் திறனாளர் நலச்சங்க பொதுச்செயலாளரான ஆசிரியர் ம.பாலன் பன்முகப்படைப்பாளியாகத் திகழ்ந்தபடி, 'மழலையர் பாடல்கள்', 'தந்தைமை' எனும் கவிதைத்தொகுப்புகளையும் 'அம்மா' எனும் சிறுகதைத்தொகுப்பையும வெளியிட்டுள்ளார்.

இதேபோல 'சிறுகதை சாதனையாளர்' விருதால் சிறப்பிக்கப்பட்டுள்ள சேலம் வெ.தமிழழகன் எழுத்துலகில் தொடாத துறைகளே இல்லையெனச் சொல்லும்படியாக சிறுகதை, தொடர்கதை, புதினம், கவிதை, சிறுவர்பாடல், கட்டுரை என பலதுறைகள் சார்ந்து ஏறத்தாழ ஐம்பது நூல்களை எழுதியுள்ளார். இந்த படைப்பாளிகள் ஒவ்வொருவரும் இளவயதிலேற்பட்ட இளம்பிள்ளைவாத பாதிப்பை மீறி செயலாற்றி தமிழ்ச்சேவை புரிகின்றனர்.

ஒரு விழிப்பார்வையிழந்த சாத்துக்கூடல் கா.இளையராஜா இருபதாண்டுக்காலமாக பல வார, மாத இதழ்களில் சிறுகதை, கவிதை, துணுக்கு போன்றவை எழுதியுள்ளதோடு, 'ஆத்தா வந்திருக்கேன்' எனும் சிறுகதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

எல்லாவகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் இணையப்பயிற்சியளிப்பதன் அவசியங்குறித்து, பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி, உலகக் கருத்தரங்குகளில் பய்கேற்றுள்ள திருச்சி பார்வையற்ற பேராசிரியர் அர.செயச்சந்திரன் ஐந்து நூல்களின் ஆசிரியரும் கூட.

'செறிவு', 'பயணத்திசை', 'தேடித்திரிகையில்....' போன்ற கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ள சென்னை தமிழியலன், 2625 படங்களோடு அமைந்த 'வரலாற்றுச்சுவடுகளில் இன்று' என்ற தலைப்பில் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோர்க்கு துணை நிற்கும் பொது அறிவு நூலைப்படைத்துள்ள நாகர்கோவில் குமரி.ஆ.குமரேசன் போன்றோர் காலின் பாதிப்பைக் கடந்தும் செயலாற்றுகின்றனர்.

'வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம்!' எனும் கவிதைத்தொகுப்பின் ஆசிரியரான சென்னைப் பல்கலை தமிழ்த்துறை மாணவர் மு.ரமேஷ், 'நெருப்பு நிஜங்கள்' கவிதைத் தொகுப்பாசிரியர் வே.சுகுமாரன் போல பல பார்வையற்ற படைப்பாளிகளும், வாசித்துக்காண்பிக்க ஆட்களில்லாத சோதனைச்சூழல்களிலும் கூட, தங்களின் படைப்புத்தாகம் நீர்த்துப்போக அனுமதிப்பதில்லை.

'பார்வையற்றோரும் இலக்கியமும்' எனும் துறைசார்ந்து ஆய்வுச்செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் காஞ்சீபுரம் மாவட்ட பார்வையற்றோர் நன்னல நிறுவனம் 'ஊற்றுக்கண்கள்' எனும் சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்நூல் முழுவதும் பார்வையற்றவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளைக் கொண்டிருப்பது இதன் சிறப்பம்சம்.

மேலும், மாற்றுத் திறனாளர்களின் வாழ்வியல் போராட்டங்களை புத்தக வடிவிலாக்கும் இலக்கியப்பணிகளோடு, 'கவிச்சிதறல்' எனம் மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ள நானும் கூட இடதுகாலினை முழுமையாக இழந்த ஒரு மாற்றுத்திறன் படைப்பாளியே.

படைப்புத்தளத்தில் மட்டுமல்லாமல் இதழியல் தளத்திலும் தொடர்ந்தியங்கும் 'உயிர்மை' இதழாசிரியரான கவிஞர் மனுஷ்யபுத்திரன் போல, ஜி.ஆல்டிரின்பிரிட்டோ, சித்தை பா.பார்த்திபன் போன்றோரும் பன்முக ஆளுமைகளோடு, உடற்குறைகடந்து தமிழ்த்தொண்டாற்றுகின்றனர்.

இதுபோல, பல மாற்றுத் திறனாளிகள் சமூக அவலங்களை சரிசெய்யும் நோக்கில் சங்கத்தமிழோடு சங்கமிக்கின்றனர். தங்கத்தமிழ் நெஞ்சத்தில் நிறைந்திருப்பதன் அடிப்படையிலேயே இத்தகையோர், தங்கள் உடலியல் தடைகளைக்கடந்தும், 'உடல் ஊனமுற்றோர்' எனும் அடையாள இழிச்சொல்லை தகர்த்தெறிந்து, சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் செயலாற்றி 'மாற்றுத்திறனாளிகள்' எனும் புது அவதாரத்தோடு தமிழன்னையின் பாதத்தை பாமலர்கள்கொண்டு பணிந்து வணங்குகின்றனர்.

இத்தகைய திறமையுள்ள மாற்றுத்திறன் படைப்பாளிகளை தட்டிக்கொடுத்து, நல்ல சிந்தனைகளை நூலாக்கிட அரசும் தமிழறிஞர்களும் துணைநின்றும், விலைகொடுத்து வாங்கி வாசிக்க பொதுமக்களும் முன்வந்தும் ஆதரித்தால் இன்னும் பல மாற்றுத் திறன் படைப்பாளிகள் உருவாகி தமிழுக்கு தங்களாலியன்ற வகையில் தொண்டாற்றுவர் என்பதில் ஐயமில்லை. இத்தகு வளர்ச்சியே செந்தமிழின் தனித்தன்மையை உலகிற்குப் பறைசாற்றும் அறப்பணியில் மாற்றுத் திறன் படைப்பாளிகளின் மகத்தான ப‌ங்களிப்பாக திகழும் எனக்கூறி விடைபெறுகிறேன்.

- கவிஞர். ஏகலைவன், சேலம்.
தொடர்பு எண்கள்: 99443 91668, 98429 74697

மேற்கண்ட கவிஞரின் கட்டுரை மாலை மலர் தினசரியில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பு மலரில் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment