Saturday, September 28, 2013

நம்பிக்கை வாசல் இதழ் மற்றும் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை இணைந்து நடத்திய முப்பெரும் விழா புகைப்படத் தொகுப்பு





நம்பிக்கை வாசலின் முப்பெரும் விழா

நம்பிக்கை வாசல் மாத இதழ் மற்றும் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை இணைந்து நடத்திய நம்பிக்கை வாசல் இரண்டாமாண்டு சிறப்பு இதழ் வெளியீடு, நம்பிக்கை வாசல் அறக்கட்டளை துவக்கம் மற்றும் சாதனையாளர் கெளரவிப்பு ஆகிய முப்பெரும் விழா கடந்த ஆகஸ்ட் 25, 2013 அன்று நாமக்கல் செளராஷ்டிரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

     கவிஞர் ச. கோபிநாத் வரவேற்புரையாற்ற இனிதே தொடங்கிய விழாவிற்கு தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் புலவர் பூ.அ.இரவீந்திரன் தலைமை தாங்கினார். “இன்றைய சூழலில் இதழ்கள் நட்த்துவதென்பது அத்தனை சுலபமான பணி இல்லை. இருந்தாலும் இதழ்களின் வாயிலாக மக்களின் கருத்துகளை செப்பனிடுவது ஒரு கலை. அந்தக் கலை கவிஞர் ஏகலைவனுக்கு சிறப்பாக கைவரப்பெற்றிருக்கிறது. காரணம், அவர் எடுத்துக் கொண்ட பாதை நம்பிக்கை சார்ந்தும் மக்களின் முன்னேற்றம் சார்ந்தும் இருப்பது தான். மற்ற இதழாளர்கள் பல வருட உழைப்பிற்கு பின் பெறும் சிறந்த இதழுக்கான விருதை, நம்பிக்கை வாசல் இதழின் முதலாண்டின் நிறைவிலேயே கவிஞர் ஏகலைவன் பெற்றிருப்பது அவரின் தொடர்ந்த முயற்சிக்கான அங்கீகாரம் எனலாம்” என பாராட்டிப் பேசினார்.

இரண்டாமாண்டு சிறப்பு இதழை எழுத்துச் செல்வர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் வெளியிட நிமி ஆயில் நிறுவன இயக்குனர் திரு. டார்கர். பி. குருமூர்த்தி அவர்கள் பெற்றுக் கொண்டார். சிறப்பு இதழ்களை இராமநாதபுரம் முனைவர். அ. சங்கரலிங்கம், சேலம் சிலம்பொலி செல்லப்பனார் தமிழ்க்காப்பு மன்ற பொருளாளர் தமிழ்த்தும்பி. மு. முகைதீன் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

     விழாவில் பேசிய எழுத்துச் செல்வர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள், “நல்ல விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது அறப்பணி. அத்தகைய அறப்பணியில் கவிஞர் ஏகலைவன் போன்றோர் ஈடுபட்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை என் சிஷ்யன் என்று சொல்லிக் கொள்வதைக் காட்டிலும், நான் அவரின் குரு என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நிதர்சனத்தில் கவிஞர் ஏகலைவன் குருவை மிஞ்சிய சிஷ்யனாகவே சாதனைப் படைத்து வருகிறார். யானைக் கட்டி போரடிப்பதைப் போன்ற இதழியல் பணியை ஏகலைவன் தொடர்ந்து செய்து வருகிறார் என்றால் அதற்கு நல்ல உள்ளங்களின் ஆதரவே காரணம். அத்தகைய ஆதரவே அவரை இன்னும் முன்னேற்றும். அவர் நம்பிக்கை வாசல் அறக்கட்டளை என்ற அடுத்த இலக்கை நோக்கியும் முன்னேறியிருக்கும் இந்த்த் தருணத்தில் நாம் எல்லோரும் அவருடனிருந்து தோள் கொடுத்து, சமூக நலன் காக்க முற்படுவோம்.” என்று பாராட்டியதோடு, நம்பிக்கை வாசல் இதழில் இடம்பெற்ற சாதனையாளர்கள், தொடர்களின் வாயிலாக பவனி வரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என அனைவரையும் தனித்தனியே குறிப்பிட்டி பாராட்டினார்.

     நம்பிக்கை வாசல் அறக்கட்டளையைத் துவக்கி வைத்த சென்னை, ஸ்ரீ மாதா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ மாதா கேன்சர் கேர் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ஐயா வி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், “நம்பிக்கை வாசல் இதழின் பக்கங்களெங்கும் நம்பிக்கை பளிச்சிடுவது சிறப்பாக இருக்கிறது. இந்த இனிய பணியோடு அறக்கட்டளை பணியையும் துவக்கி இருக்கும் கவிஞர் ஏகலைவனுக்கு இன்னும் பொறுப்புகள் கூடியிருக்கிறது. இருப்பினும் அது அவருக்கு சுகமான அனுபவமாகவே இருக்கும். நல்ல மனிதர்கள் சூழ கவிஞர் ஏகலைவன் வாழ்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று புகழ்ந்தார்.

     நாமக்கல் வின்னர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வின்னர் டாக்டர்.டி.எம். மோகன், நாமக்கல் மகிழ்ச்சி மன்றத் தலைவர் அருள்நிதி ஸ்ரீ இராஜேந்திரன், நாமக்கல் தமிழ்ச்சங்க செயலாளர் நூலகர் கலை இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

     திருவாளர்கள். எம். ஆர். செளந்தரராஜன், டாக்டர் எம்.ஏ. இளங்கோவன், சி. வெற்றிவேல், திருமதி. இராஜதிலகம், கவிஞர் தியாக. இரமேஷ், யோகி ஸ்ரீ இராமனந்த குரு, செல்வி ரா. ராஷிகா, கவிஞர் துளிர், சி. தணிஜோ, எஸ்.கார்த்திக், ஜனாப் ஹெச். அப்சர் அலி, செல்வி. எம். ஜெயலட்சுமி ஆகியோரும் நம்பிக்கை வாசல் இதழை வடிவமைத்த காந்தள் அச்சுக்கலையகத்தார், நம்பிக்கை வாசல் இதழை வடிவமைத்து வரும் சகா டிசைனர்ஸ் நிறுவனத்தார் ஆகியோரும் நம்பிக்கை நட்சத்திரம் விருதளித்து கெளரவிக்கப்பட்டனர்.

     எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணர் உள்ளிட்ட அரங்கலிருந்தோர் அனைவரும் கேள்வி எழுப்ப வளரும் நட்சத்திரம் செல்வன். எம். அப்துல்லா அவர்கள் உலக நாடுகளின் தலைநகரங்கள் பெயர்களை கூற அனைவரும் அவரை வாழ்த்தினர்.
     நம்பிக்கை வாசல் அறக்கட்டளையின் நிறுவனத்தலைவரும், நம்பிக்கை வாசல் இதழ் ஆசிரியருமான கவிஞர் ஏகலைவன், “என்னுடைய இந்த வளர்ச்சி நான் தனித்து வளர்ந்ததால் கிடைத்ததல்ல. என்னுடைய நண்பர்களும் எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன், ஐயா வி. கிருஷ்ணமூர்த்தி போன்றோரின் வழிகாட்டுதல்கள், நண்பர்களின் ஆதரவும் ஊக்கமும் அளித்த உத்வேகம் ஆகியவற்றால் கிடைத்தது. இன்றைக்கு நம்பிக்கை வாசல் இதழ் இரண்டாமாண்டை எட்டியிருக்கிறது என்றால் அதற்கு இதழின் ஆசிரியர் குழு, விளம்பரதாரர்கள், வாசகர்கள் ஆகியோர் தான் காரணம். இதழின் வெற்றியே என்னுடைய நெடுநாளைய கனவான நம்பிக்கை வாசல் அறக்கட்டளையை துவக்க உந்தியிருக்கிறது. இந்த அத்தனை முயற்சிக்கும் துணை நின்ற அனைவருக்கும் நன்றி” என்று நன்றியுரை நிகழ்த்தினார்.

     முனைவர். கோபால. நாராயணமூர்த்தி விழாவை இயல்பாக தொகுத்து வழங்கினார்.

No comments:

Post a Comment